சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றம் ஒன்று செல்வராகவன் - சோனியா அகர்வால் பிரிவிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. சுயவிருப்பின் பேரில் விவாகரத்து பெறும் வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ராமலிங்கம், அவர்கள் இருவரையும் சட்டபூர்வமாக பிரித்துவைத்தார். முன்னதாக மார்ச் 9 ம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த இருவரும் தமது முடிவில் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பதாகவும், விவாகரத்தை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி, 12 ம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
காதல் கொண்டேன் படப்பிடிப்பில் காதல் கொண்ட சோனியா - செல்வா 2006 ம் ஆண்டு திருமணம் செய்தனர். எனினும், இரண்டு வருடங்களே நீடித்த அவர்களின் தாம்பத்யம், 2009 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடுக்கப்பட்ட விவாகரத்து வழக்கின் மூலம் கேள்விக்குறியானது. அன்றிலிருந்து பிரிந்து வாழ்ந்த இருவரும், நேற்றிலிருந்து நிரந்தரமாக பிரிந்து சென்றனர்.

